மகாராஷ்ட்ராவில் குமரி மீனவர்கள் சிறை - முதல்வர் தலையிட வேண்டும் - சீமான்
சென்னை: மகாராஷ்ட்ராவில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கை:
அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ஒரு கேரள மீனவர் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்து கடந்த 9 நாட்களாக மகாராஷ்ட்ரா மாநில காவல் துறையினர் சிறை வைத்து இருப்பது வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது.
சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களில் டைட்டஸ் (வயது 37), கார்லோஸ் (62), கிறிஸ்டோபர் (60), விஜின் (20), சூசைஅருள் (20), மனோஜ் (17), ரத்தீஸ் (17) ஆகியோர் குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறையைச் சேர்ந்தவர்கள், பீட்டர் (42), குமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்தவர், நசார்ஸ் (45), கேரள மாநிலம் புதியத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர்களைக் காணாமல் இவர்களின் குடும்பத்தார் வேதனையில் உள்ளனர். எனவே இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு அந்த மீனவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான் என்பதை உறுதி செய்து, உடனடியாக விடுவிக்குமாறு மகாராஷ்ட்ர மாநில அரசுக்கு எடுத்துக் கூறி விடுதலை செய்ய உதவ வேண்டும்.












Click it and Unblock the Notifications