மாரிதானியாவில் பிடிபட்ட கடாபி உளவாளியை ஒப்படைக்க லிபியா, பிரான்சு கோரிக்கை
பிரான்ஸ்; மாரிதானியா நாட்டில் பிடிபட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் தலைமை உளவாளி அல் செனூசியை ஒப்படைக்க லிபியா, பிரான்சு ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
லிபியாவின் அதிபராக இருந்தவர் சர்வாதிகாரி கடாபி. இவருக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தினர். இதையடுத்து அவர் புரட்சி படையினரால் கொல்லப்பட்டார்.
தற்போது லிபியாவை புதிய அரசு ஆட்சி நடத்தி வருகிறது. கடாபியின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கடாபி உளவுப் படையை அமைத்து இருந்தார். அந்த உளவுப் படையின் தலைவராக அல்லா அல்-செனூசி இருந்தார். புரட்சியின்போது அவர் லிபியாவில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் இவர் மரிதானியா நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மொராக்கோவில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மரிதானியா தலைநகர் நோக்சாட் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர் பிடிபட்டார்.
அதுபற்றி தகவல் அறிந்ததும் லிபியா, மரிதானியா அரசுடன் தொடர்பு கொண்டது. கடாபியின் தலைமை உளவாளியான செனூசியை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே செனூசியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் சர்கோசி வலியுறுத்தியுள்ளார். கடந்த 1989-ம் ஆண்டு பிரான்ஸ் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் செனூசி தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். எனவே அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் வற்புறுத்துகிறது.