தங்கத்திற்கான வரி உயர்வை கண்டித்து நகை வியாபாரிகள் 3வது நாளாக கடையடைப்பு !

தங்க நகைகள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு பட்ஜெட்டில் உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இப்போராட்டம் இன்று 3வது நாளாக நடந்து வருகின்றது.
ஆனால் இப்போராட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 2012-13ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கான சுங்கம் மற்றும் கலால் வரி அதிகரிக்கப்பட்டது சரியான முடிவு தான் என்றும், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும் நகைக்கடை உரிமையாளர்களின் எண்ணம் நிறைவேறாது என்றும் பிரணாப் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக 90 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறிய அவர், இறக்குமதி வரி உயர்வால் கடத்தல் அதிகரிக்கும் என்று கூறப்படுவதையும் திட்டவட்டமாக மறுத்தார்.
தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள பெரிய நகைக்கடை உரிமையாளர்கள் 3வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications