முதல்வர் பதவி கிடைக்குமா? கிடைக்காதா? பாஜகவுக்கு எடியூரப்பா 48 மணிநேர கெடு

சுரங்க ஊழல் முறைகேட்டில் முதல்வர் பத்வியை இழந்தார் எடியூரப்பா. சில காலம் அமைதியாக இருந்த அவர் கடந்த மாதம் தமக்கு மீண்டும் முதல்வர் பதவியோ அல்லது மாநில பாஜக தலைவர் பதவியோ வழங்கப்பட வேண்டும் என்றார். ஆனால் எடியூரப்பா மீதான சுரங்க ஊழல் வழக்கில் நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பிறகு அவருக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் எடியூரப்பா மீதான சுரங்க முறைகேடு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து மீண்டும் பிரச்சனை வெடித்தது. முதல்வர் சதானாந்தா எம்.பி.யாக வெற்றி பெற்ற உடுப்பி-சிக்மளூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தை எடியூரப்பா குழுவினர் முற்றாக புறக்கணித்தனர்.
மீண்டும் ஆலோசனை
இந்நிலையில் தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா நேற்று பெங்களூர் புறநகரில் திடீர் ஆலோசனை நடத்தினார். இதில் 55 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அடுத்த 48 மணிநேரத்துக்குள் தற்போதைய முதல்வர் சதானந்தா கவுடாவை நீக்கிவிட்டு எடியூரப்பாவை முதல்வராக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
இதனிடையே எடியூரப்பா ஆதரவு எம்.பி.க்கள் 10 பேர் டெல்லியில் பாஜக தலைவர் நித்ன் கட்காரியை இன்று நேரில் சந்தித்து அவரை முதல்வராக்க நேரில் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
70 எம்.எல்.ஏக்கள் ஆதரவு
தற்போதைய சூழ்நிலைகள் குறித்து செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:
கடந்த ஜூலை மாதம் நான் பதவி விலகியபோது என்னுடன் 70 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். கடந்த 8 மாதங்களில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்திருந்தாலும் அதே எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்கள் தற்போதும் என்னுடன் உள்ளனர். மேலும் ஷெட்டர் போன்றவர்களும் இணைந்திருக்கின்றனர். எனக்கு 70 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பாஜக மேலிடம் முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், சுரங்க ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில் எடியூரப்பாவை மீண்டும் முதல்வராக்குவதாக கட்சித் தலைமை உறுதியளித்திருந்தது. தற்போதைய நிலையில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மற்றொரு மூத்த தலைவரான பொம்மை, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எடியூரப்பாவின் தொடர் அதிரடியால் கர்நாடக பாஜக அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலவிவருகிறது.












Click it and Unblock the Notifications