வங்கதேச போருக்கு உதவியதாகக் கூறி திரிபுரா முதல்வருக்கு கெளரவம்: அறிவிப்பால் சர்ச்சை
அகர்தலா: வங்கதேச விடுதலைப் போரில் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காக திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் கெளரவிக்கப்படுவதாக வங்கதேச நாடு அறிவித்துள்ளது வடகிழக்கு மாநிலங்களில் பலத்த்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத் தலைநகரில் அந்நாட்டின் சுதந்திர நாளையொட்டி மார்ச் 27-ந் தேதி நடைபெறும் விழாவில் 129 வெளிநாட்டவர் சிறப்பிக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். திரிபுரா மாநில முதல்வராக உள்ள மாணிக் சர்க்கார் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வங்கதேச நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் திபு மோனி, மாணிக் சர்க்காருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
வங்கதேசத்தின் இந்த அறிவிப்பு திரிபுராவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் ரத்தன் லல் நாத் இது பற்றி கூறுகையில், வங்கதேச போருடன் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லாதவர் மாணிக் சர்க்கார். வங்கதேச விடுதலைக்கு அவர் பங்களிப்பு செய்ததற்கான எந்த ஒரு ஆதாரமோ, எந்த ஒரு ஆவணமோ இதுவரை இல்லை. இப்படியான நிலையில் அவரை எப்படி கெளரவிக்கலாம் என்றார்.
மேலும் வங்கதேச அரசில் உள்ள சிலரை மாணிக் சர்க்கார் கைக்குள் போட்டுக் கொண்டு தமது பெயரை சேர்க்கச் செய்திருப்பது வங்கதேச போரின் போது உதவி செய்த உண்மையான நண்பர்களை அவமதிக்கக் கூடிய செயல் என்றார் அவர்.
இது பற்றி வங்கதேச போரின் போது வங்கதேச விடுதலைப் போராட்டக் குழுவினருக்கு பயிற்சி அளித்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ கேப்டன் பி.ஆர்.சட்டர்ஜி கூறுகையில், 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் போது தார்மீக ரீதியாகவும் நேரடியாகவும் உதவி செய்தோரை புறக்கணிக்கக் கூடாது என்றார்.
இந்நிலையில் மாணிக் சர்க்காரை கெளரவிக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிபுராவில் உள்ள வங்கதேச துணை தூதரகம் முன்பாக ஞாயிற்றுக்கிழமையன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications