திரிவேதி விலகலுக்கு மன்மோகன் வருத்தம்- புதிய ரயில்வே அமைச்சராக முகுல்ராய் நாளை பதவியேற்பு

நாடாளுமன்றத்தில் தினேஷ் திரிவேதியின் ராஜினாமா குறித்து மன்மோகன்சிங் கூறியதாவது:
தினேஷ் திரிவேதி நல்ல ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அமைச்சரவையிலிருந்து அவர் விலகுவது வருத்தம் அளிக்கிறது. அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்.
நாம் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகிறோம். அனைத்து விவகாரங்களிலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒருமித்த கருத்து நமக்கு மிகவும் அவசியமானது. மாறுபட்ட கருத்துகளோடு ஒரு கூட்டணி அரசாங்கம் செயல்படுவது என்பது கடினமானது என்றார் அவர்.
மேலும் புதிய ரயில்வே அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பிரணாப் விளக்கம்
முன்னதாக நாடாளுமன்றத்தில் தினேஷ் திரிவேதியின் ராஜினாமாவை பிரதமர் பரிசீலித்து வருவதாக பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். பிரணாப்பின் விளக்கத்தை பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன. அமைச்சரவைக்கு பிரதமர் மற்றுமே பொறுப்பானவர். மற்றொரு நபர் கூறியபடியெல்லாம் அமைச்சரவையை மாற்றியமைக்க முடியாது. அமைச்சரவை மாற்றம் குறித்து நாடாளுமன்றத்தில்
தெரிவிக்க வேண்டும். ஆனால் ஊடகங்களைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பது பாஜக, இடதுசாரிகளின் கருத்து.
தினேஷ் திரிவேதி
இதே நேரத்தில் அமைச்சரவையில் இருந்து விலக மறுத்து வந்த தினேஷ் திரிவேதிமீது கட்சி ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.
முகுல்ராய்
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி முன்மொழிந்துள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முகுல்ராய் ரயில்வே அமைச்சராக இன்று பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் நாளை காலை 10 மணிக்கு அவர் பொறுப்பேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விலகல் ஏன்?
தினேஷ் திரிவேதி தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. இது அவர் சார்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் உடனே பதவி விலகவும் கட்சி மேலிடம் கட்டளையிட்டது. ஆனால் காங்கிரஸின் ஆதரவுடன் மமதாவை திரிவேதி சமாதானம் செய்ய முயன்றார். இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications