விரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: 3 அடுக்கு பாதுகாப்பு
நெல்லை: சங்கரன்கோவில் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 242 வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புளியங்குடி வீரசாமி செட்டியார் பொறியியில் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்த 242 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.
பின்னர் 242 இயந்திரங்களும் 24 மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாரிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான புளியங்குடி வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகளில் அவை வைக்குப்பட்டு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு அந்த பொறியியல் கல்லூரிக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்நியர் நுழைவதை தடுக்க கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த கல்லூரி முழுவதும் போலீஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (21ம் தேதி) நடக்கிறது.












Click it and Unblock the Notifications