பிட் அடித்ததால் வெளியேற்றப்பட்ட பிளஸ் 2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை
கிருஷ்ணகிரி: பிளஸ் டூ தேர்வின்போது பிட் அடித்ததால் வெளியேற்றப்பட்ட மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நாகரசம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் திருப்பதி. கூலித் தொழிலாளி. அவரது மகன் பிரதீப் (17). அவர் சிங்காரப்பேட்டையில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. கடந்த 16ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. சிங்காரப்பேட்டையில் உள்ள தேர்வு மையத்திற்கு திடீர் என்று பறக்கும் படையினர் வந்தனர். அவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவ-மாணவியரை சோதனை செய்தனர். அப்போது பிரதீப் பிட் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தன்னை மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்குமாறு அவர் கெஞ்சினார். ஆனால் விதிமுறைகளை மீறிய அவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று பறக்கும் படையினர் உறுதியாகத் தெரிவி்ததுவிட்டனர்.
இதனால் அவமானம் அடைந்த அவர் நேராக வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் பிரதீப்பின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications