ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டங்கள் இல்லை - கி.வீரமணி
சென்னை: ரயில்வே பயணிகளின் வசதியை அதிகரித்து, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டம் எதுவும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள அளவுக்கு, பயணிகளுக்கான வசதிகள் பெருக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிர்ச்சிக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு உள்பட பல்வேறு சங்கடங்களை பயணிகளுக்கு தரும் வகையில் ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வசதிகள் அதிகரிப்பு திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய ரயில் பாதைகள் குறித்தும், தமிழகத்திற்கு இரட்டைப் பாதைகளுக்கான அறிவிப்புகள் இல்லாததும் வருந்தத்தக்கது.
தென் இந்தியாவில் டிக்கெட் இல்லா பயணம் குறைவு. வடக்கே செல்லும் ரயில்களில் டிக்கெட் எடுப்பவர்கள் மிகவும் குறைவு என்பது அனுபவ உண்மை. ஆனால் அவர்களுக்கு வசதிப் பெருக்கம். ஆனால் முறையாக டிக்கெட் எடுத்து செல்வோருக்கு வசதி சுருக்கம். இதுபோன்ற ஓட்டைகளை அடைத்து டிக்கெட் இல்லாத திருட்டுப் பயணத்தை தடுத்து நிறுத்தினால், ரயில்வே துறையின் வருவாய் பெருக வாய்ப்பு ஏற்படும்.
ராயபுரம் முனையம் வரவேற்கக்கூடியது. தமிழகத்திற்கு மேலும் பல புதிய திட்டங்கள் தேவை. இது குறித்து தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications