கூடங்குளத்தில் மல்லுக்கு நிற்கும் போராட்டக்காரர்கள்: அடக்க வந்திருக்கும் 3000 போலீஸ்
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததையடுத்து அங்கு 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி அணு உலைஎதிர்ப்பாளர்களும், கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கடந்த சில மாதங்களாக இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தவிர எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி செய்வதாகக் கூறி சில தொண்டு நிறுவனங்களில் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த நிலையி்ல் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் தெரிவித்தார். இது போராட்டக்காரர்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆகையால் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பாதுகப்பு பணியில் ஈடுபட்ட மணிமுத்தாறு மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 3000 போலீசார் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கூடங்குளம், வள்ளியூர், பணகுடி, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிபிஜி ஜார்ஜ், தென் மண்டல போலீஸ் ஜஜி ராஜேஸ் தாஸ், நெல்லை சரக டிஐஜி வரதராஜு மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உள்ளிட்ட 10 மாவட்ட எஸ்.பி.க்கள், டி.எஸ்.பி.க்களும் கூடங்குளம் வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை கூடங்குளம் வந்தனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து கூடங்குளம் காவல் நிலையத்தில் வைத்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் அனைவரும் கூடங்குளத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications