22 வாக்குச்சாவடிகளில் 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவு: மக்கள் பேரார்வத்துடன் வாக்களித்தனர்

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்கியது. அங்கு மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பூத் எண் 4,12, 14, 15, 17, 30, 32, 34, 35, 37, 38, 49, 50, 53, 54, 94, 115, 129, 149, 178, 190, 207 ஆகிய 22 வாக்குச்சாவடிகளில் 1320 வாக்காளர்கள் மாலை 5 மணிக்கு பின்னரும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் இந்த வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் பரமசிவன் கூறுகையில், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதனால் 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்றார்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நேற்று காலை திருமணம் செய்து கொண்ட மாடசாமி, சங்கரகோமதி தம்பதியினர் திருமண மண்டபத்தில் இருந்து மாலையும், கழுத்துமாக வாக்களிக்க வந்தனர். இதே போன்று நேற்று காலை திருமணம் செய்து கொண்ட இன்னொரு மணமகன் போத்திலிங்கம் என்பவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். இதனால் சங்கரன்கோவில் வாக்குச்சாவடிகளில் புதுமாப்பிள்ளைகள் மயமாக இருந்தது.












Click it and Unblock the Notifications