உசிலம்பட்டியில் தேர்வின்போது விடைத்தாள்களை மாற்றி சிக்கிய 2 பிளஸ் டூ மாணவர்கள்
மதுரை: உசிலம்பட்டியில் பிளஸ் டூ கணித தேர்வு எழுதும்போது விடைத்தாள்களை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாணவர்கள் கையும், களவுமாகப் பிடிபட்டனர்.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று கணித தேர்வு நடந்தது. மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ முருகன் தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் அடங்கிய பறக்கும்படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் உசிலம்பட்டியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவ-மாணவியரை சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் தேர்வு எழுதிய 2 மாணவர்கள் விடைத்தாள்களை மாற்றியுள்ளனர். அந்த நேரத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி தலைமையிலான பறக்கும்படையினர் அந்த 2 மாணவர்களையும் கையும், களவுமாகப் பிடித்தனர்.
இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி நாகராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து நாகராஜ் கூறுகையில்,
முறைகேட்டில் ஈடுபட்ட 2 மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அவர்கள் கணித தேர்வு தவிர மற்ற தேர்வுகளை எழுதலாம். விசாரணை முடிந்த பிறகு மேல் நடவடிக்கை குறித்து விசாரணை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications