அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் தமிழர்களுக்கு நிவாரணியல்ல-வைகோ

கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்விதப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
உள்நாட்டுப் போர் குறித்து அந்நாடு அமைத்த விசாரணை ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி.) பரிந்துரைகளை அமல்படுத்துவது தான் தீர்மானத்தில் பிரதானமாக இருக்கிறது.
ஆனால் தமிழர்களின் மீது இலங்கை ராணுவம் நடத்திய இனவெறிப் படுகொலை, பாலியல் பலாத்காரம் குறித்து ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெறவில்லை. உலக நாடுகளின் எதிர்ப்பில் இருந்து தப்பிக்க அமைக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை போலியானது.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், தமிழர்களுக்கு நிவாரணியாக இருக்காது.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து இலங்கை ராணுவத்தையும், போலீசாரையும் வெளியேற்றி விட்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டு பல நாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதே சரியானதாக இருக்கும்.
இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.
உலக நாடுகளெல்லாம் அணு உலைகளை மூடி வருகின்றன. புகுஷிமா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த அணு உலை விபத்துகள் பல்வேறு படிப்பினைகளைக் கொடுத்துள்ள நிலையில், கூடங்குளம் பகுதி மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது.
இந்தியாவின் மின் உற்பத்தியில் 2.7 சதவீதம் மட்டுமே அணு மின்சாரம். மின் பற்றாக்குறையை அணு மின் நிலையங்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்பது ஏற்புடையதல்ல. தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடுவோரைக் கொச்சைப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை என்றார்.
முன்னதாக திருமண விழாவில் பேசிய வைகோ கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு சங்கரன்கோவிலில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடியது. தேர்தல் பார்வையாளர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் நடந்துள்ள தேர்தலில், முடிவு எதுவாக இருந்தாலும் மதிமுக ஏற்றுக்கொள்ளும் என்றார்.












Click it and Unblock the Notifications