கூடங்குளத்தில் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் பணிகள் துவக்கம்- ரஷ்ய விஞ்ஞானிகளும் திரும்பி வந்தனர்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து அங்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படையின் 4 கம்பெனியைச் சேர்ந்த 300 பேரும், கேரளாவில் இருந்து வந்த கலவர தடுப்பு பிரிவு போலீசார் 6 கம்பெனியை சேர்ந்த 600 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னேற்படாக நேற்று 49 பெண்கள் உள்பட 186 பேரை போலீசார் கைது செய்தனர். இதையொட்டி ராதாபுரம் தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை கிராமங்களில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து முடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போலீசார் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள் கடலோர காவல் படை விமானம் ஒன்று சுற்றி வருகிறது. பாதுகாப்பு வளையத்திற்குள் அத்துமீறி வரும் படகுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் நேற்று மாலை 3 மணி அளவில் அணுமின் நிலையம் திறக்கப்பட்டு 300 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 7 மாதங்களுக்குப் பிறகு பணிக்குத் திரும்பியதால் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
ரஷ்ய விஞ்ஞானிகளும் பணிக்கு திரும்பினர்:
கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து 96 ரஷ்ய விஞ்ஞானிகள் உள்பட 950 ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். அவர்கள் 2 பேருந்துகள் மற்றும் கார்களில் பலத்த பாதுகாப்புடன் அணுமின் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது அணுஉலை வடிவமைப்பு விஞ்ஞானி மாமிமோவ் அலெக்சாண்டர், மூத்த விஞ்ஞானி கிரிகோரி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இது சிறப்பான நாள். இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தோம். இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இது அணுமின் நிலையத்தின் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வளர்ச்சிக்ககு கிடைத்த வெற்றி ஆகும். தமிழக அரசு சரியான முடிவை எடுத்துள்ளதற்காக அதற்கு பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கடினமாக உழைத்து இந்தியாவை முன்னேற்ற காத்திருந்தோம். இனி நாங்கள் துரிதமாக பணிகளை முடிப்போம். அணுஉலை எதிர்ப்பாளர்கள் மக்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனர். மக்களும் சரியாக புரிந்து கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அணுஉலைக்குள் எரிபொருளை நிரப்ப பல்வேறு வழிகள் உள்ளன. இது குறித்து இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும். ஆனால் எரிபொருள் நிரப்புவதற்கான ஆயத்த பணிகள் இன்று துவங்கப்படும் என்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி கூறுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்றே சில ஊழியர்கள் பணி்க்கு திரும்பினர். இன்று ரஷ்ய விஞ்ஞானிகள், மேலும் பல ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications