''உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க, வெளியே போறோம்''.. மன்மோகனுக்கு சரத்பவார் பதில்!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்துப் பேசிய மன்மோகன் சிங், கூட்டணி அரசை வழி நடத்திச் செல்வதில் பல நிர்ப்பந்தங்கள் உள்ளன. கூட்டணி அரசு என்பது, கடினமான முடிவுகளை மேலும் கடினமாக்கிவிடுகிறது.
9 சதவீத பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாட்டை வழி நடத்திச் செல்வதற்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம். ரயில்வே அமைச்சர் திரிவேதியின் ராஜினாமா எனக்கு வருத்தம் அளிக்கிறது.
2011-12ம் ஆண்டில் தொழில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட 1.6 சதவீத அளவுக்குத்தான் வளர்ச்சியடைந்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பெருமைப்பட வைக்கிறது. வட ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா நாடுகளில் நிலவும் பிரச்சனைகளால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது, உணவு தானியங்கள், உரங்களின் விலை உயர்வுக்கும் காரணமாகிவிட்டது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பயன் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகலாம் என்றார்.
வேதனை வேதனை.. சரத் பவார்:
இந் நிலையில் மும்பையில் நிருபர்களிடம் பேசிய சரத்பவார், கூட்டணிக் கட்சிகள் குறித்த பிரதமரின் கருத்து வேதனையையும், மன உளைச்சலையும் தருகிறது.
நான் தேசியவாத காங்கிரசின் தலைவராக இருக்கிறேன். 15 எம்.பிக்களைக் கொண்ட நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பிரதமருடனும், மத்திய அரசுடனும் இணைந்து பணிபுரிந்து வருகிறோம். இந்த 8 வருடத்தில் ஒரு விஷயத்தில்கூட அரசுக்கு இடையூறாக நாங்கள் நடந்து கொண்டது இல்லை. கூட்டணி தர்மத்தை மதித்து நடந்து வருகிறோம்.
எந்த ஒரு கட்சி குறித்தும் பிரதமருக்கு பிரச்சனை இருந்தால், அதில் ஒரு முடிவை எடுப்பதற்கான முழு உரிமையும் அவருக்கு உண்டு (அதாவது
''உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க, வெளியே போறோம் என்கிறார்) என்றார்.
பிரதமரின் இந்த கருத்தால் மத்திய அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, அப்படி ஏதும் இல்லை. மத்தியில் ஆளும் கூட்டணி குறித்து எங்களுக்கு மாறுபட்ட கருத்து எதுவும் இல்லை. பிரதமரின் கருத்தை மட்டுமே நான் விமர்சிக்க விரும்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications