நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆதரவோடு தப்பிய மத்திய அரசு!
டெல்லி: தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைப்பதற்கு எதிராக பாஜகவும் இடதுசாரிகளும் ராஜ்யசபாவில் கொண்டு வந்த திருத்த தீர்மானங்களை நிராகரிக்க சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு உதவின.
அரசுக்கு ஆதரவாக 105 ஓட்டுகளும், எதிராக 83 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்தத் தீர்மானங்கள் தோற்கடிக்கப்பட்டன.
ஜனாதிபதியின் உரையில், தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த அறிவிப்புக்கு எதிராக பாஜக திருத்த தீர்மானங்களை தாக்கல் செய்தது.
அதே போல பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), குருதாஸ் தாஸ் குப்தா (இந்திய கம்யூனிஸ்ட்), பர்த்ருஹாரி மெக்தாப் (பிஜூ ஜனதாதளம்) உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் திருத்த தீர்மானங்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து இதன் மீதான விவாதத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்து பேசியபின், மத்திய அரசுக்கு எதிரான திருத்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.
அப்போகு மத்திய அரசுக்கு ஆதரவாக 105 எம்.பிக்களும், எதிராக 83 உறுப்பினர்களும் வாக்களித்ததால் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதனால் அரசு தப்பியது.
தீர்மானம் தோற்கடிப்பட முக்கிய காரணம், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுமே முக்கிய காரணமாகும். இந்த வாக்கெடுப்பில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.
இந் நிலையில் தான் முலாயமும் மாயாவதியும் மத்திய அரசுக்கு கை கொடுத்து உதவினர்.
இந்தத் தீர்மானம் வென்றிருந்தாலும் மத்திய அரசு பதவி விலகத் தேவையில்லை என்றாலும் அது அரசுக்கு பெருத்த பின்னடைவாகக் கருதப்பட்டிருக்கும்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் எதிர்க்கட்சியினரின் திருத்தம் எதுவும் இல்லாமல், குரல் வாக்கெடுப்பிலேயே நிறைவேறிவிட்டது. இதன் மூலம் அரசு முதல் தடையைத் தாண்டியிருக்கிறது. இன்னமும் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் ஆகியவை நிறைவேறியாக வேண்டும்.
சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் போக்கைப் பார்க்கும்போது இனி எல்லா வாக்கெடுப்புகளுமே எளிதாக நிறைவேறிவிடும் என்றே தோன்றுகிறது.
இதன்மூலம் திரிணமூல் காங்கிரஸ் தரும் சிக்கல்களில் இருந்து மத்திய அரசு தப்பிவிடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications