புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்தியா தான் முதலில் அறிவித்தது: கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக இந்தியா தான் முதலில் அறிவித்தது என்று இலங்கை அமைச்சர் கருணா (எ) விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக இந்தியா தான் முதலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பல நாடுகள் அறிவித்த பிறகே இலங்கை அரசு புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று இந்தியா தான் கங்கணம் கட்டியது.
பயங்கரவாதத்தை ஒழித்திட வேண்டும் என்று கூறி வந்த சில நாடகுள் கூட தற்போது அந்த முயற்சியை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன. போருக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதக நிலைமை சில நாடுகளுக்கு பிடிக்கவில்லை. இங்கு மீண்டும் கிளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது தான் அவற்றின் நோக்கம். எனவே, கட்சி வித்தியாசமின்றி இந்த முயற்சிகளை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.