ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்

டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு
அந்தரங்கமான ஒரு இடத்தில், இரண்டு நபர்கள் சம்மதித்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல என்ற ஒரு தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு வழங்கியது. அந்த தீர்ப்பில், ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கூறி, அதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377 திருத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறி இருந்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தீர்ப்பினை எதிர்த்து பாரதிய ஜனதா தலைவர் பி.பி.சிங்கால், ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் மேல்முறையீடு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
சர்ச்சை
இந்த வழக்கு விசாரணை பல்வேறு திருப்பங்களை சந்தித்தது. முதலில் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாறிவரும் சூழ்நிலையில், ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பார்வையும் மாற்றப்படவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்கோத்ரா வாதிடுகையில், "ஓரினச்சேர்க்கை ஒழுக்கக்கேடானது, எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் பரவ காரணமாக உள்ளது. ஓரினச்சேர்க்கையை நமது சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அது குற்றம்தான்'' என்று வாதாடினார்.
ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஜெயின் வாதாடியபோது மாறுபட்ட கருத்தினை கூறினார். "(இருவர் சம்மதத்துடனான) ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பில் எந்த சட்டத்தவறும் இல்லை என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது'' என தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் கண்டனம்
மத்திய அரசின் இரு வெவ்வேறு துறை அமைச்சகங்களின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களின் வாதம் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி கண்டனம் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில், "டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி சரியானதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ளட்டும்' என கூறப்பட்டிருந்தது.
அரசின் நிலை
இந்த நிலையில் மேல்முறையீட்டு வழக்குகள் மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாய் முன்னிலையில், அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆஜராகி அரசின் நிலையை தெளிவுபடுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் அல்ல என்பதுதான் மத்திய அரசின் நிலை ஆகும். டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து, ஓரினச்சேர்க்கை குற்றம் என்பது ஓரினச் சேர்க்கையாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தெரிந்துகொண்டோம். தெளிவு பெற்றோம். அதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
கோர்ட்டில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்கோத்ரா ஓரினச்சேர்க்கைக்கு எதிராக வாதாடியது, சட்ட அமைச்சக அதிகாரிகளுக்கும், உள்துறைக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் நடைபெறாததின் விளைவுதான் என்றார்.












Click it and Unblock the Notifications