கூடங்குளம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக ரூ40 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

கூடங்குளம் அணு மின் நிலைய பணிகள் தொடங்கினாலும் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ராதாபுரம், வள்ளியூர் பஞ்சாயத்து யூனியன்களை சேர்ந்த 11 கிராம பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசினர்.
இதில் கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் குடிநீர் பிரச்சனையை பஞ்சாயத்து தலைவர்கள் முன்வைத்தனர். இதையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்படுத்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தைப் போலவே பொதுமக்கள் பயன்படும் வகையில் மற்றுமொரு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை பொறுத்தவரை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமே அணு மின் நிலையம், அணு விஜய் டவுன் ஷீப் ஆகிய பகுதிகளில் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஓன்றுக்கு 76 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பெறப்படுகிறது. இது போன்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ராதாபுரம் பகுதியில் உள்ள 11 கிராம பஞ்சாயத்து மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நம்பப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.500 கோடிக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளில் முதன்மையாக ரூ40 கோடியில் இந்த திட்டம செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications