டெல்லியில் அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்- ஆதரவாளர்கள் திரண்டனர்!

வலுவான லோக்பால் மசோதா கோரி கடந்த ஆண்டு தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை ஹசாரே நடத்தினார். இதைத் தொடர்ந்து மத்திய அரசும் லோக்பால் மசோதாவை கொண்டுவந்தது. மாநிலங்களவையில் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் ஊழலை ஒழிக்கப் போராடி உயிரிழந்தவர்களுக்கு நீதிகேட்டும் மத்திய அரசின் லோக்பால் மசோதாவை மேலும் வலுவாக்கக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தமது ஆதரவாளர்களுடன் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதில் மத்திய பிரதேசத்தில் மணல் மாபியாவால் கொல்லப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியின் உறவினர்கள், தமிழ்நாட்டில் மணல் மாபியாக்களால் கொல்லப்பட்ட இளைஞர் சதீஷ்குமாரின் தந்தை என ஊழலை ஒழிக்கப் போராடி உயிர்நீத்தோர் குடும்பத்தினரும் அன்னா ஹசாரே ஆதரவாளர்களும் நாடு முழுவதுமிருந்து திரண்டு வந்து பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்துவிட்டு உண்ணாவிரதம் நடைபெறும் ஜந்தர் மந்தருக்கு தமது ஆதரவாளர்களின் வந்தே மாதரம் முழக்கங்களுடன் வந்தடைந்தார்.
உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பா செய்தியாளர்களிடம் ஹசாரே பேசியதாவது:
ஊழலுக்கு எதிராகப் போராடி உயிரிழந்தோரின் பெற்றோர், குழந்தைகள், மனைவிகள் நீதி கோரி நிற்கின்றனர். ஆனால் அரசாங்கமோ அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இது மிகப்பெரிய போராட்டம். இதனை அரசு கவனித்தாக வேண்டும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அரசு கொண்டுவருகிறது. மக்களோ அதனை மேம்படுத்துவதற்காக உயிர்துறக்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications