பாதுகாப்பு அமைச்சகம்- ராணுவ தலைமை தளபதி இடையே தொடரும் "யுத்தம்"
டெல்லி: பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இப்போதைய சர்ச்சை அசாம் ரைபிள்ஸ் படையின் தலைமை இயக்குநராக யாரை நியமிப்பது என்பதில்தான்!
தமது பிறந்தநாள் தேதி விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்பட்டு உச்சநீதிமன்றத்துக்கு சென்றார் தலைமை தளபதி வி.கே.சிங். ஒருவழியாக உச்சநீதிமன்றத்தில் அவர் குட்டுப்பட்டு பிரச்சனை ஓய்ந்தது.
இந்நிலையில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் தலைமை இயக்குநர் பதவிக்கு லெப். ஜெனரல் ஏ.கே.செளத்ரி பெயரை வி.கே.சிங் பரிந்துரைத்திருந்தார். இதை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கொண்டு செல்லாமல் நேரடியாக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தார் சிங்.
பாதுகாப்பு அமைச்சகத்துக்குத்தான் எந்த ஒரு பரிந்துரையையும் அனுப்ப வேண்டும். அந்த அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இதர அமைச்சகங்களுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் அசாம் ரைபிள்ஸ் படையை உள்துறை அமைச்சகம்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதால் நேரடியாக வி.கே.சிங் அணுகியிருக்கிறார்.
ஆனாலும் பாதுகாப்பு அமைச்சக செயலாளரோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் எந்த ஒரு பிரிவுமே ஒப்புதல் அளிக்காத நிலையில் வி.கே.சிங்கின் பரிந்துரையை பரிசீலிக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சகத்தை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
மேலும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கான தலைமை இயக்க்குநர் பதவிக்கு புதிய பெயரை பரிந்துரை செய்யவும் ராணுவத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் கோரியது. ஆனால் இதுவரை ராணுவத்தரப்பு எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் உள்ளது.












Click it and Unblock the Notifications