கடத்திய 2 இத்தாலியர்களை விடுவித்தனர் மாவோயிஸ்டுகள்- ஒரிசா எம்.எல்.ஏ. கதி என்ன?
புவனேஸ்வர்: மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்ற 2 இத்தாலியர்கள் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்ட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடத்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகா கதி என்ன என்பது பற்றி தெரியவில்லை.
ஒரிசாவின் கந்தமால்-கஞ்சம் மாவட்ட எல்லையில் கடந்த வாரம் 2 இத்தாலியர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். தங்களுக்கு எதிரான பசுமை வேட்டை நடவடிக்கையைஉடனே நிறுத்த வேண்டும், சிறையில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர்.
மேலும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்மா மற்றும் தண்டபாணி மொக்ந்தி ஆகியோரை தூதர்களாக நியமித்தனர். மாவோயிஸ்டுகள் நியமித்த தூதர்களும் ஒரிசா மாநில அரசுடன் 2 நாள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் கோரபுட் மாவட்டத்தில் லஷ்மிபூர் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாவை திடீரென மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசுடனான பேச்சுவார்த்தையை மாவோயிஸ்டு தூதர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
மத்திய, மாநில அரசுகள் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் இத்தாலியர்களை மீட்பது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.
இதனிடையே கந்தமால் மாவட்டம் தரிங்கிபடி என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 இத்தாலியர்களையும் மாவோயிஸ்டுகள் விடுவித்து சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னமும் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் கதி என்ன என்று தெரியவில்லை.
மாவோயிஸ்டுகளின் தொடர் கடத்தல் சம்பவங்களால் ஒரிசா மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தள ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications