தேசிய அளவில் 3-வது அணி அமைக்கப்படும்: பிரகாஷ் கரத்

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்தும்படியும், நாட்டில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகளுக்கு வலிமை சேர்க்கும்படியும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
3-வது அணி
இடதுசாரி மற்றும் ஜனநாயக கட்சிகள் மக்களுக்காக ஒரு மாற்று அமைப்பை உருவாக்க இருக்கிறது. அந்த அணி, காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணியாக நாங்கள் தரத்தயாராக இருக்கிறோம்.
தேசிய அளவில் இந்த 3-வது அணி அமைப்பது குறித்து மீண்டும் தீவிரமாக முயற்சி எடுக்க உள்ளோம். நாட்டில் உள்ள காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து, 3-வது அணியை அமைத்து வலுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் ஊழல் கட்சிகள். மக்கள் இதை நன்றாக உணர்ந்து உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இதை நன்கு உணர்ந்ததால்தான் மக்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளை படுதோல்வி அடையச் செய்து சமாஜ்வாடி கட்சிக்கு மகத்தான வெற்றியை தந்து உள்ளனர்.
தற்போது, தொடர்ந்து ஏறி வரும் கடும் விலைவாசி உயர்வு, மலிந்து விட்ட ஊழல், பெருகி வரும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் பெரிதும் அல்லல்பட்டு வருகின்றனர்.
ஊழல் கட்சிகள்
காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த 2-வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத கொள்கைகளால் பொது மக்கள் பெரிதும் அவதியை சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் கூட எரிபொருள் மற்றும் உரத்துக்கான மானியம் கணிசமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விலைவாசி மேலும் உயரும்.
ஊழலைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. பல்வேறு ஊழல்களில் காங்கிரஸ் ஈடுபட்டதுபோல், பா.ஜனதாவும் பெருமளவில் ஊழலில் ஈடுபட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ள ஊழல்களே இதற்கு சான்று. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள்தான் ஊழல் இல்லாமல், தூய்மையான கட்சிகளாக விளங்குகின்றன என்றார் பிரகாஷ் கரத்.












Click it and Unblock the Notifications