இலங்கைக்கு "சமமான நிலையை" ஏற்படுத்த இந்தியா உதவியது: ராஜபக்சேவை சமாதானப்படுத்த மன்மோகன்சிங் துடிப்பு

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் மார்ச் 22-ந் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்குப் பணிந்து இந்திய அரசு அவ்வாறு செயல்பட்டதாக இலங்கை அரசு கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில், வாக்கெடுப்பு நடந்த நாளுக்கு முன், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே மார்ச் 19-ம் தேதியிட்டு எழுதிய கடிதத்துக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பிய பதில் கடிதத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அக்கடிதத்தில் மன்மோகன்சிங் கூறியுள்ளதாவது:
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. 2009-ம் ஆண்டு மே மாதத்துடன் இலங்கையில் நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது. அப்போதிலிருந்து, மூன்று ஆண்டுகளாக இலங்கையும் இந்தியாவும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு உதவிகளை வழங்கி வருகின்றன.
தேசிய முக்கியத்துவம் நிறைந்த இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய அமைப்புகளுக்கு இலங்கை அரசு அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போர் தொடர்பாக "படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையம்' (எல்.எல்.ஆர்.சி.) அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த நீங்கள் காட்டும் முனைப்புக்காக மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வை அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து கடந்த காலங்களிலும் நாம் விவாதித்துள்ளோம்.
இனங்களைக் கடந்து அளிக்கப்படும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மூலம்தான் அவர்களுக்கு நீதி, கண்ணியம், சமத்துவம், சுய மரியாதை கிடைக்கும். அதற்காக இலங்கை அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தைப் பொறுத்தவரை, சாதகமாக வழி காணும் முயற்சியில் இலங்கை தரப்புடன் சேர்ந்து முயற்சி மேற்கொள்ளும்படி நான் இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.
தீர்மானத்தில் இடம்பெற்ற வரிகளில், இலங்கைக்கு சமமான நிலையை ஏற்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்றதை நீங்கள் அறிவீர்கள்.
அந்த நோக்கத்தின்படி, இலங்கையில் நிலையான, பாதுகாப்பான, வளமான சூழ்நிலையில் அனைத்து சமூகத்தினரும் வாழ மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்தியா தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும். இதன் மூலம் வலுவாக உள்ள இந்திய-இலங்கை உறவு மேலும் வலுப்பெறும்'' என்று அதில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மத்தியில் ஆட்சியையும் பறி கொடுத்து விடக் கூடாது, ஆட்சியிலும் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், அதேசமயம், போர்க்குற்றம் புரிந்த, இனவெறி பிடித்த ராஜபக்சேவும் வேண்டும் என்பதை மன்மோகன் சிங்கும் அவரைச் சார்ந்தவர்களும் வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications