தமிழகத்தைப் பிரிக்கச் சொன்ன ராமதாஸ் இப்போது வட மாவட்டங்களைப் பிரிக்கச் சொல்கிறார்!

வட மாவட்டக் கட்சி என்ற பெயருடன் திகழ்ந்து வரும் பாமக, தமிழகத்தின் தென் பகுதியிலும் காலூன்ற என்னென்னவோ செய்து பார்த்தது. ஆனால் முடியவில்லை. இதனால், தமிழகத்தின் தென் பகுதிகள் வளம் பெற மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகம் என்ற புதிய மாநிலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார். இருப்பினும் இந்த கோரிக்கைக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது திடீரென தமிழகத்தின் வட மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையை எழுப்பியுள்ளார் ராமதாஸ். கிருஷ்ணகிரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் வட மாவட்டங்கள் அனைத்து நிலைகளிலும் பின் தங்கியுள்ளது. இதற்கு நிர்வாக வசதி இல்லாதது காரணமாகும். அதனால் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம் ஆகிய பெரிய மாவட்டங்களை, நிர்வாக வசதி கருதி பிரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள அணைகளில் உள்ள நீரை கோடை காலத்தில் விவசாயிகள் பயன்படுத்தி சாகுபடி செய்கின்றனர். தமிழக அரசு இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும், கர்நாடகா விவசாயிகள் கோடை காலத்திலும் அணை நீரை கொண்டு விவசாயம் செய்வது நியாயமானது என, கர்நாடகா முதல்வர் கூறுகிறார்.
ஆற்று நீர் பிரச்னையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அரசுகள் அண்டை மாநிலத்திடம் தமிழகத்தின் உரிமையை தாரை வார்த்து விட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007ம் ஆண்டு வெளியானாலும் கூட, தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட தற்போதுள்ள தமிழக அரசும், இதற்கு முன் ஆண்ட தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் உதயகுமாரை தமிழக அரசு நம்ப வைத்து ஏமாற்றி விட்டதுடன் அவர்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகிறது. தற்போது அணு உலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் உதயகுமார் உடனடியாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் மேற்கொண்டு அணு உலையை எதிர்த்து போராட முடியும்.
சிங்களவர்களும், தமிழர்களும் இலங்கையில் ஒன்றாக சேர்ந்து இருந்தால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. தனி ஈழம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாகும். தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்கட்சியாக இருக்கும் போது மட்டுமே, தனி ஈழத்தை பற்றி பேசுவார். ஆளும் கட்சியாக இருக்கும் போது அதை பற்றி பேசமாட்டார் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications