சசிகலா குரூப்பில் மேலும் ஒருவர் சிக்கினார்-மிடாஸ் மோகன் கைது
சென்னை: சசிகலா தரப்பைச் சேர்ந்த முக்கியமானவர்களில் ஒருவரான மிடாஸ் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிடாஸ் மதுபான ஆலையின் நிர்வாகி ஆவார்.
சென்னை சாஸ்திரி நகர் போலீஸார் இன்று மிடாஸ் மோகனைக் கைது செய்தனர். பண மோசடி வழக்கில்அவர் கைதாகியுள்ளாராம்.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது...
வேலூரை சேர்ந்தவர் அரி துளசிராமன். அதிமுக நிர்வாகியான இவர், வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்து இருந்தார். இதற்காக, மிடாஸ் மோகனை சந்தித்தார். ரூ.50 லட்சம் கொடுத்தால் மேயர் சீட் வாங்கித் தருவேன் என்று மோகன் கூறியிருக்கிறார்.
இதை நம்பி, பெசன்ட் நகரில் உள்ள மோகன் வீட்டில் வைத்து 50 லட்ச ரூபாயை அரி துளசிராமன் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மோகன், மேயர் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டபோது துளசிராமனை அடித்து உதைத்து, என் பவர் தெரியாமல் விளையாடுகிறாய் என மிரட்டி அனுப்பிவிட்டார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசில் துளசிராமன் புகார் கொடுத்தார்.வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். பெசன்ட் நகர் வீட்டில் இருந்த மோகனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அதிமுக ஆட்சியின்போது மிடாஸ் மோகன் கம்பெனியில் இருந்துதான் 90 சதவீத சரக்குகள் டாஸ்மாக் கடைக்கு வாங்கப்படும். இவரை அதிமுகவை விட்டு நீக்கிய பின்னர், 10 சதவீதம் மட்டுமே வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு மிடாஸ் மோகன் வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் அவரைக் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர்.
மிடாஸ் நிறுவன விற்பனையத் தடுக்கும் நோக்கில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற பேச்சும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications