வியட்நாமில் இந்தியாவின் எண்ணெய் அகழாய்வு ஆராய்ச்சிக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு
பெய்ஜிங்: வியட்நாம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் அகழாய்வுப் பணியை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்சீனக் கடற்பரப்பில் வியட்நாமுக்கு சொந்தமான பகுதியில் இந்தப் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
ஆனால் இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக சீனாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சக அதிகாரி சன் வெய்டோங் கூறியுள்ளதாவது:
தென்சீனக் கடற்பரப்பில் இந்தியா எண்ணெய் அகழாய்வு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவரும் இடம் வியட்நாமுக்கும் சீனாவுக்கும் சர்ச்சைக்குரிய இடமாகும். இந்த விவகாரத்தில் எதுவித தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை.
இந்நிலையில் இந்தியா ஒருதலைப்பட்சமாக வியட்நாமுடன் இணைந்து அங்கே பணிகளை மேற்கொள்வது நல்லது அல்ல. இந்த விவகாரத்திலிருந்து இந்தியா ஒதுங்கி இருக்க வேண்டும். ஏனென்றால் இது மிகவும் சிக்கலான பிரச்சனை என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்கட்டமைப்புகளை சீனா மேற்கொள்வதற்கும் தென்சீன கடற்பரப்பில் இந்தியா பணிகளை மேற்கொள்வதற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டும் இதே விவகாரத்தை சீனா எழுப்பியிருந்தது. ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமோ சர்வதேச சட்டவிதிகளின்படியே வியட்நாமுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறி சீனாவின் கருத்தை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பதிலடி?
இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தனது ராணுவதளங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் சீனா தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு ஒரு பதிலடி நடவடிக்கையாகவே தென்சீனக் கடலில் இந்தியா கால்பதித்துள்ள விவகாரத்தை சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்பாதையெங்கும் கடற்படை தளங்களை அமைத்துள்ள சீனா, எதிர்காலத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தமது நாட்டுக்கு எரிபொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றே கணித்தது.
ஆனால் சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடலில் ஹைட்ரோகார்பன் அகழாய்வுப் பணிகளில் இந்தியா ஈடுபடுவதை அந்நாட்டினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தென்சீனக் கடல் பிரதேசத்தில் உள்ள தீவுகள் பலவற்றுக்கு சீனா, வியட்நாம் மட்டுமல்ல பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா உள்ளிட்ட நாடுகளுமே உரிமை கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications