எரிவாயு உற்பத்தி குறைந்து வருவதால் மின்சார துறைக்கு பாதிப்பு ஏற்படும்?
சரியும் எரிவாயு உற்பத்தி
எதிர்வரும் நிதி ஆண்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி 35 விழுக்காடு குறைந்து நாள் ஒன்றுக்கு 2.76 கோடி கன மீட்டராக சரிவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14-ஆம் நிதி ஆண்டில் உற்பத்தி மேலும் 12 விழுக்காடு சரிந்து நாள் ஒன்றுக்கு 2.42 கோடி மீட்டராக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு உற்பத்தி குறையும் நிலையில் மின் உற்பத்தி துறையில் இடர்பாடுகள் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நம் நாட்டின் மின் உற்பத்தி துறையில் அனல்மின் திட்டங்களின் பங்களிப்பே அதிகமாக உள்ளது. இத்திட்டங்களில் நிலக்கரிதான் பிரதான எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் நிலக்கரிக்கான தேவைப்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதனை ஈடு செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. எனவே பற்றாக்குறையை ஈடு செய்ய இறக்கு மதியைத்தான் அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி இலக்குகளை எட்ட இயலாத சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் எரிவாயு உற்பத்தியும் சரிவடையும் நிலை உருவாகியுள்ளதால் மின் உற்பத்தி துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு செயல்படக்கூடிய சில மின் நிலையங்கள் மின்சார உற்பத்தியை தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. ஆனால் எரிவாயு சப்ளை இல்லாததால் இத்திட்டங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் மத்திய மின்சார ஆணையம், 2015-16-ஆம் நிதி ஆண்டு வரை இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை அமைக்க வேண்டாம் என அண்மையில் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி
மின்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை உறுதி செய்தார். "பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017) கூடுதலாக சுமார் ஒரு லட்சம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாது என தெரிகிறது. ஏனென்றால் எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி திறனை கூடுதலாக 1000 மெகா வாட் அளவிற்கே உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் (2011-12) நாள் ஒன்றுக்கு 4.27 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு கிடைத்தது. அடுத்த நிதி ஆண்டில் இதில் 1.50 கோடி கன மீட்டர் குறையும் என்றும், 2013-14-ஆம் ஆண்டில் மேலும் 34.20 லட்சம் கன மீட்டர் சரிவடையும் என்றும் தற் போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் 2014-15 மற்றும் 2015-16 நிதி ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு உற்பத்தி குறித்த மதிப்பீடு களை வெளியிடவில்லை.
"பெட்ரோலிய அமைச்சகத்தின் மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும்போது 2015-16-ஆம் நிதி ஆண்டு வரை இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்ற முடிவுக்குதான் வர வேண்டியுள்ளது. எனவே அந்த ஆண்டு வரை உள்நாட்டில் கிடைக்கும் எரிவாயுவை நம்பி மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிக்க முயல வேண்டாம் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மின்சாரம், உரம் உள்ளிட்ட சில முக்கிய துறைகள் இயற்கை எரிவாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி வருகின்றன. மின் திட்டங்கள்தான் அதிக அளவில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றன. அதாவது, மொத்த எரிவாயு பயன்பாட்டில் மின்சார துறையின் பங்கு மட்டும் 37 விழுக்காடாக உள்ளது. இந்நிலையில் உள்நாட்டிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எரிவாயுவைப் பயன்படுத்தக் கூடிய சில மின் திட்டங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன. இந்த திட்டங்களின் உற்பத்தி திறன் ஒட்டுமொத்த அளவில் 4,000 மெகா வாட்டாக இருக்கும் என தெரிகிறது. அதே சமயம் எரிவாயுவை பயன்படுத்தக் கூடிய, 15,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட பல்வேறு மின் திட்டங்கள் தற்போது நிர் மாணிக்கப்பட்டு வருகின்றன. இவையனைத்தையும் 2012 காலண்டர் ஆண்டுக்குள் செயல் பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
என்.டி.பி.சி. அனல்மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான இது பெரும்பாலும் நிலக்கரியைத்தான் எரிபொருளாக பயன்படுத்து கிறது. எனினும் சுமார் 4,000 மெகா வாட் மின்சாரத்தை இயற்கை எரிவாயுவை பயன் படுத்தி உற்பத்தி செய்து வருகிறது. எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்யும்போது பயனீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விலையை குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அரூப் ராய் சவுத்ரி தெரி வித்துள்ளார்.