தாம்பரம்- வேளச்சேரி, பூந்தமல்லி- கத்திப்பாரா, பூந்தமல்லி- வடபழனி வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம்

பாதை 1- கிழக்கு தாம்பரத்தில் இருந்து வண்டலூர் வழியாக வேளச்சேரி வரை
பாதை 2- பூந்தமல்லியில் இருந்து போரூர் வழியாக கத்திப்பாரா வரை
பாதை 3- பூந்தமல்லியில் இருந்து வளசரவாக்கம் வழியாக வடபழனி வரை என மூன்று வழித்தடங்களில் இந்த மோனோ ரயில் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.
நான்காவது கட்டமாக வண்டலூரையும், புழலையும் இணைக்கக்கூடிய 54 கி.மீ நீளமுள்ள வழித்தடமும் செயல்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து இன்று சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை செயல்படுத்துவற்காக, சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 57 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட உள்ள இத்திட்டம் கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரிலிருந்து வேளச்சேரி வரையிலும்,
போரூர் வழியாக பூந்தமல்லியிலிருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித்தடங்கள் கொண்டதாக இருக்கும்.
இந்தத் திட்டம் வடிவமைத்து, நிறைவேற்றி, நிதி திரட்டி, பராமரித்து ஒப்படைக்கும் முறையின் கீழ் செயல்படுத்தப்படும். இதன் அடுத்த கட்டமாக வண்டலூரையும், புழலையும் இணைக்கக்கூடிய 54 கி.மீ நீளமுள்ள நான்காவது வழித்தடம் செயல்படுத்தப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளும் மிகவேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக 2012-2013ம் ஆண்டு வரவு- செலவு திட்டத்தில் 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாசாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை ஆகிய வழித்தடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் வாய்ப்பை உயர்த்தும் நோக்குடன், போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்த இந்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் மேற்கொண்ட சென்னை போக்குவரத்து ஆய்வறிக்கையின் அடிப்படையில் இணைப்பு சாலைகள், விடுபட்ட சாலைகள், சாலைகளை அகலப்படுத்துதல், மேம்பாலங்கள், உயர்மட்டச் சாலைகளை அமைத்தல் ஆகிய பணிகளையும் படிப்படியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதியுதவியைக் கோர உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications