இன்னும் கூட அதிகமாக வரி போட்டிருக்கலாமே: கருணாநிதி

2012-2013ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையைத் தொடங்கிய அவர் தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு சங்கரன்கோவிலில் பெரும் வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். அவர் எதிலும் வெற்றி என்ற வார்த்தையைத் தொடங்கியதுமே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இடைவிடாமல் சில நிமிடங்களுக்கு மேசைகளைத் தட்டினர். இதைக் கேட்டும், பார்த்தும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிரிப்பும், புன்னகையும் தாங்க முடியவில்லை. வாய் விட்டுச் சிரித்துவிட்டார் அவர்.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது உரையைத் தொடங்கி வாசிக்க ஆரம்பித்தபோது வரிக்கு வரி அவர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேச தொடர்ந்து மேசைகளைத் தட்டினார்கள் அதிமுகவினர். அதன் பின்னர் பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார் அவர். காலை 10 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்த அவர் மதியம் 12.56 மணிக்கு தான் முடித்தார். அவர் பட்ஜெட் உரை முடியும் வரை அதாவது 2 மணிநேரம் 56 நிமிடங்கள் நின்று கொண்டே இருந்தார். அவர் உரையை முடித்ததும் அதிமுகவினர் மேசைகளைத் தட்டி பாராட்டினர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்:
கேள்வி: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளதே, என்ன முடிவெடுக்கப்பட்டது?.
பதில்: இந்த கூட்டத்தொடரில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யார் யார் பேச வேண்டும் என்பது பற்றியெல்லாம் கலந்து பேசப்பட்டது.
கேள்வி: பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து என்ன?.
பதில்: பாவம், பன்னீர்செல்வம்! நீண்ட நேரம் படிக்க நேரிட்டது! ஆழ்ந்து பார்த்தால் அந்த அளவுக்கு அவர் நேரத்தைச் செலவிட்டிருக்கத் தேவையில்லை. அவரது உரையில் அம்மா அம்மா என்ற அர்ச்சனை தான் மேலோங்கி இருந்தது.
கேள்வி: பட்ஜெட்டில் 1500 கோடி ரூபாய்க்கு புதிதாக வரி போட்டிருக்கிறார்களே?.
பதில்: இதைவிட அதிகமாகப் போட்டிருப்பார்கள். நம்முடைய மக்களுக்கு அதற்குப் பிறகாவது தாங்கள் செய்த தவறை உணரக்கூடிய நிலைமை வரும் என்றால், இன்னும் கூட அதிகமாக வரி போட்டிருக்கலாம்.
கேள்வி: சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?.
பதில்: எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் டெல்லியிலே எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தெரிவிக்கிற அளவுக்கு இங்கே அவர்களால் தெரிவிக்க முடியவில்லையே. பட்ஜெட் விவாதத்தின்போது திமுகவின் நிலை தெரிய வரும் என்றார்.












Click it and Unblock the Notifications