கூடங்குளம்: ரூ.500 கோடி திட்டம்- ஒத்துழைக்காத பஞ்சாயத்து தலைவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை
கூடங்குளம்: கூடங்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்கு ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைக்காத பஞ்சாயத்து தலைவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மார்ச் 19ம் தேதி முதல் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு ரூ.500 கோடியில் நலத்திட்டங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் கடந்த 24ம் தேதி தொடங்கின. இத்திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது. இதில் காவல் துறை உயர் அதிகாரிகளும், 9 கிராம பஞ்சாயத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் கூத்தங்குளி, விஜயபதி, கூடங்குளம் ஆகிய 3 கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் வரவில்லை.
மேலும் அந்த 3 பேர் மீது சம்பந்தப்பட்ட கிராமங்களில் குடிநீர், ரேஷன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கலெக்டரிடமும், போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். ரூ.500 கோடி திட்டங்களை நிறைவேற்ற வரும் 27ம் தேதிக்குள் பஞ்சாயத்துகளிடம் அறிக்கை பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் கூடங்குளம், கூத்தக்குளி, விஜயபதி ஆகிய 3 பஞ்சாயத்து தலைவர்களும் ஒத்துழைக்காததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications