டிவியில் ஆபாச படத்தைப் போட்டு பார்க்கச் சொல்லி துன்புறுத்துகிறார்: கணவர் மீது மனைவி புகார்
ராமநாதபுரம்: டிவியில் ஆபாச படங்களை போட்டு அதை பார்க்கச் சொல்லி வற்புறுத்துகிறார் என்று தனது கணவர் மீது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாரதி(24). அவரது கணவர் பந்தப்ப நகரைச் சேர்ந்த ரமேஷ் (30). அவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 30 பவுன் நகை, ரூ.20,000 மதிப்புள்ள சீரிவரிசைப் பொருட்களை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். ரமேஷ் திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்தார். அப்போது அவர் தான் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த ஆபாச பட சி.டி.க்களை போட்டு பார்த்து ரசித்துள்ளார். மேலும் தனது மனைவியையும் ஆபாச படம் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. காலையில் இருந்து இரவு வரை ஆபாச படம் பார்க்கச் சொல்லி மனைவியை துன்புறுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத பாரதி கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் 20 பவுன் நகை, ரூ.50,000 பணம் கேட்டு வருகிறார். மேலும் டி.வி.யில் ஆபாச படத்தை போட்டு அதை பார்க்கும்படி கொடுமைப்படுத்துகிறார். இதற்கு உடந்தையாக கணவரின் தாயார் சண்முகவேல், அக்கா தேவி மற்றும் உறவினர்கள் சரோஜா ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் ரமேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications