மாஜி பஞ். தலைவரை கொலை செய்யத் தூண்டிய வழக்கு: திவாகரனுக்கு ஜாமீன் மறுப்பு

தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்து உள்ளது ரிஷியூர் கிராமம். அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருந்தவர் சோம. தமிழார்வன். அவரை சிலர் அரிவாளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் தூண்டுதலின்பேரில் தான் அடையாளம் தெரியாத 3 பேர் தன்னை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகாரின்பேரில் திவாகரன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வேறு வழக்குகளில் கைதாகி திருச்சி சிறையில் இருக்கும் திவாகரனை மீண்டும் கைது செய்து வலங்கைமானில் உள்ள நீதிபதி செல்வபாண்டி வீட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி திவாகரனை வரும் 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி செல்வபாண்டி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications