அரசு நிலம் அபகரிப்பு வழக்கு-சசி கும்பலை சேர்ந்த 'மிடாஸ்' மோகனுக்கு 15 நாள் காவல்!
மன்னார்குடி: அரசு நில அபகரிப்பு வழக்கில் 'மிடாஸ்' மோகனை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார்குடி ருக்குமணிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ரூ.27 லட்சம் மதிப்புள்ள 6,886 சதுர அடி அரசு நிலத்தை திவாகரன், அவரது உறவினர் 'மிடாஸ்' மோகன் உள்பட 12 பேர் ஆக்கிரமிப்பு செய்ததாக காளஞ்சிமேடு கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் போலீசில் புகார் தந்தார்.
இதை தொடர்ந்து திவாகரன், 'மிடாஸ்' மோகன் உள் பட 12 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது, கொலை மிரட்டல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திவாகரன் கடந்த திங்கள்கிழமை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 9ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 'மிடாஸ்' மோகன், ஏற்கனவே வேலூரைச் சேர்ந்தவர் அரி துளசிராமன் என்ற அதிமுக நிர்வாகியிடம் வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று திருவாரூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது 'மிடாஸ்' மோகன், நீதிபதியிடம் தனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் காயங்கள் கூட இன்னும் ஆறவில்லை என்றும், தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன் பிள்ளை, 'மிடாஸ்' மோகனை வரும் 11ம் தேதி வரை 15 நாள் காவலில் வைக்கவும், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டார்.
அதிமுக ஆட்சியின்போது 'மிடாஸ்' மோகன் கம்பெனியில் இருந்துதான் 90 சதவீத சரக்குகள் டாஸ்மாக் கடைக்கு வாங்கப்படும். இவரை அதிமுகவை விட்டு நீக்கிய பின்னர், 10 சதவீதம் மட்டுமே வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு 'மிடாஸ்' மோகன் வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் அவரைக் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications