பள்ளிக்கூடத்தை இடிச்சப்ப எங்கே போனீங்க... போலீஸைப் பார்த்து அழுத உதயக்குமார் தாயார்!
நாகர்கோவில்: இப்போது எங்களது வீட்டுக்கு இத்தனை போலீஸார் வந்துள்ளீர்களே, எங்களது பள்ளியை பலமுறை தாக்கி சீரழித்தார்களே, அப்போதெல்லாம் எங்கே போனீர்கள் என்று போலீஸாரைப் பார்த்து கோபமாகக் கேட்டபடி கண்ணீர் விட்டு அழுதார் உதயக்குமாரின் தாயார் பொன்னுமணி அம்மாள்.
நாகர்கோவிலில் உதயக்குமாரின் வீடு உள்ளது. வீட்டின் மாடியில் உதயக்குமார் நடத்தி வரும் சாக்கர் அறக்கட்டளையின் அலுவலகம் உள்ளது. அங்கு இன்று உள்துறை அதிகாரிகள் குழு திடீர் ரெய்டு நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டனர்.
இதைத் தொடர்ந்து டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் தலைமையில் பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த உதயக்குமாரின் தாயார் பொன்னுமணி வெளியே வந்தார். வெளியே குவிந்து நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதபடி, அன்று எங்களது பள்ளியை அத்தனை முறை தாக்கி இடித்தனரே, அப்போதெல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள் என்று கேட்டபடி புலம்பினார்.
இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உதயக்குமாரும், அவரது மனைவியும் இணைந்து நடத்தி வரும் சாக்கர் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் தொடர்ந்து விஷமிகளால் தாக்கப்பட்டு வருகிறது. இதுவரை பலமுறை அந்தப் பள்ளியைத் தாக்கி சூறையாடியுள்ளனர். பள்ளியின் சுற்றுச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கூட போலீஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications