தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வழங்கும் திட்டமில்லை: மத்திய அரசு
டெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படத்தொடங்கிய உடன் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை பிரச்சனை தீரும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாக தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்க, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய மின்துறை அமைச்சகத்தின் "அமைச்சக ஆலோசனைக் குழுக்' கூட்டம் மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அதிமுக எம்பி ஓ.எஸ். மணியன் பேசுகையில்,
தமிழ்நாட்டில் 100 சதவீத கிராமங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளன. குடிசைகளுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். பிரதமரை நேரில் சந்தித்த போது, மாநிலத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதை மத்திய மின் தொகுப்பில் இருந்து உடனடியாக வழங்க வேண்டும். கூடங்குளம் அணு மின் திட்டப் பணிகளுக்கும் முதல்வர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அந்த நிலையத்தில் இருந்து முதலாவதாக உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்றார்.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சுஷில்குமார் ஷிண்டே, 11வது ஐந்தாண்டு திட்டத்தில் பாரத் நிர்மான் திட்டம் மூலம், இந்தியாவில் ஒரு லட்சம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம், ஒரு லட்சத்து மூன்றாயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மொத்தம் 53 ஆயிரத்து 922 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 8, 9, 10 ஆகிய மூன்று ஐந்தாண்டு திட்டங்களில், மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைவிட அதிகம்.
தமிழக மின்சார பற்றாக்குறை..
தமிழகத்தின் மின்சார பற்றாக்குறையை சரிசெய்ய, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, தமிழகத்தில் நிலவும் கடும் மின் பற்றாக்குறையை போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கும் திட்டம் எதுவும், மத்திய அரசிடம் இல்லை.
அதே நேரத்தில் சென்னை அருகே தேசிய அனல் மின் ஆணையமும், தமிழக மின்சார வாரியமும் இணைந்து தொடங்கிய, அனல் மின் நிலையத்திலிருந்து, 500 மெகாவாட் மின்சாரமும், விரைவில் தொடங்கவுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து, 1,000 மெகாவாட் மின்சாரமும்தமிழகத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தின் மின் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications