அரசுக்கும் ராணுவத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை - பிரணாப் முகர்ஜி

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் அடுத்தடுத்து பரபரப்பு புகார்களை வெளியிட்டு வருகிறார். முதலில் அவரது பிறந்த தேதி எது என்பதில் பெரும் சர்ச்சை எழுந்தது. உச்சநீதிமன்றம் போய் குட்டுப்பட்டார் விகே சிங்.
தற்போது அவர் லஞ்ச குற்றச்சாட்டுக்களையும், ஊழல் புகார்களையும் அம்பலப்படுத்த தொடங்கியுள்ளார்.
மோசமான தளவாடங்கள், தளவாட கொள்முதலில் லஞ்சம் போன்றவை குறித்து ராணுவ தளபதி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்றமே பெரும் ரகளைக்குள்ளானது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "மத்திய அரசுக்கும், ராணுவ தலைமைக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ராணுவ தளபதிக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் உள்ள கருத்து வேறுபாடு குறித்து கேட்டபோது, இது இருவரிடையே நடக்கும் அபிப்பிராய பேதத்தால் ஏற்படும் பிரச்சினைதானே தவிர வேறு ஏதும் இல்லை. எனினும் ராணுவ தளபதியால் எழுப்பப்பட்ட இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும். ராணுவ தளபதியும் மத்திய அரசில் அங்கம் வகிப்பவர்தான்," என்றார்.












Click it and Unblock the Notifications