திருவண்ணாமலையில் பலத்த காற்றுடன் திடீர் மழை: இடி தாக்கி 2 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று காலையில் பலத்த காற்றுடன் திடீரென மழைப் பெய்தது. அப்போது இடி தாக்கியதில் 2 பேர் பலியாகினர்.
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையி்ல் இன்று அதிகாலையில் பலத்த காற்று வீசியது. காலை 6 மணி அளவில் திடீர் இடியுடன் கூடிய மழைப் பெய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்து இடி, மின்னலுடன் பெய்த மழை அரை மணி நேரத்திற்கு நீடித்தது. இதனால் காலையில் கூலி வேலைக்கு சென்ற பணியாளர்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுங்கினர்.
இந்த நிலையில் பெரியகுளத்தை சேர்ந்த கூலி தொழிலாளர் சந்திரன், முனிசாமி, சுந்தரமூர்த்தி ஆகியோர் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கினர். அப்போது அவர்கள் நின்ற பகுதியில் பலத்த இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த 3 பேரில் சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மழைக்காக சோமாசிபாடி அருகே உள்ள மரத்தடியில் ஒதுங்கிய கடம்பை கிராமத்தை சேர்ந்த துரைசாமி மீது இடி தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காலையில் மழைப் பெய்தால் இன்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.












Click it and Unblock the Notifications