மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 9ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஏப்ரல் 9ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. பதவி பொறுப்பேற்ற நாள் முதல் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து ஏப்ரல் 1 ந் தேதி முதல் வரலாறு காணாத அளவுக்கு 37 சதவீத அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு செய்துள்ள மின்கட்டண உயர்வு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விரிவாக அறிக்கை விடுத்துள்ளார். இந்த கட்டண உயர்வு, அன்னியில் அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலைகள், கொள்ளைகள் மணிக்கணக்கில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, அரசு நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் குறுக்கீடுகள், அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்சினைகள், தி.மு.க.வினர் மீது அடுக்கடுக்கான பழிவாங்கும் நடவடிக்கைகள், தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்த முயற்சி போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேயுள்ளது.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஏப்ரல் 9 ந் தேதி திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஏப்ரல் 9ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்டங்களின் சார்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications