உ.பி.: ரயில்வே பிளாட்பார்மில் 1 மணிநேரம் குதிரை சவாரி செய்த சமாஜ்வாடி எம்.எல்.ஏ.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. முதல்வராக பொறுப்பேற்ற முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதே தனது முதல் கடமை என்று கூறினார். ஆனால் முதல்வராக பதவியேற்ற அன்று மாலையே பிரபல தாதா ராஜா பய்யாவை அமைச்சராக்கி சிறைத்துறை உள்பட 3 துறைகளை அவரிடம் கொடுத்தார். இந்நிலையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. பயணிகளைப் பொருட்படுத்தாது ரயில்வே நிலையத்தில் குதிரை சவாரி செய்துள்ளார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான ஷகீர் அலி நேற்று வைஷாலி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் லக்னோவில் இருந்து தியோரியா வந்தார். அப்போது அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் ரயில்வே நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. வை அழைத்துச் செல்ல ஒரு குதிரையையும் கொண்டு வந்திருந்தனர். ரயிலை விட்டு இறங்கிய ஷகீர் அலி குதிரையில் ஏரி பயணிகளின் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாது பிளாட்பார்மில் ஒரு மணி நேரம் சவாரி செய்தார்.
இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அலி கூறுகையில், குதிரை சவாரி செய்தால் என்ன, கட்சி சின்னமான சைக்கிளை ஓட்டினால் என்ன, எனக்கு எல்லாம் ஒன்று தான். நான் குதிரை சவாரி செய்தே பூர்வாஞ்சல் முழுவதும் சென்று கட்சி கொள்கைகளைப் பரப்புவேன் என்றார்.