நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு: 8 வாகனங்கள் சேதம்
நெல்லை: நெல்லையில் தி்முக நிர்வாகி வீட்டில் நேற்று மர்ம கும்பல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 5 கார்கள், 3 பைக்குகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உயிர் தப்பினர்.
பாளை அண்ணாநகர் அருகேயுள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாப்புலர் மாடசாமி. திமுக முன்னாள் பகுதி செயலாளராக இருந்தார். அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி பொன்னம்மாள், மகன்கள் சுந்தர், வள்ளி நாயகம், கணேசன், முத்தையா, வெங்கடேஷ் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் பாப்புலர் மாடசாமியின் மருமகள் இந்திரா வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. இதை பார்த்த இந்திரா ஓடிச்சென்று கதவை பூட்டிக் கொண்டார். காம்பவுண்டுக்குள் நுழைந்த அந்த கும்பல் வீட்டு மாடி மற்றும் அங்கிருந்த வாகனங்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதுடன் அரிவாளால் வெட்டியது.
இதில் 4 கார்கள், ஒரு லோடு ஆட்டோ, 3 பைக்குகள் சேதமாகின. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்ததைப்பார்த்த அந்த கும்பல் 4 கார்களில் தப்பி ஓடியது. போலீஸ் கமிஷனர் கருணாசாகர், துணை கமிஷனர் ஜெயபாலன், உதவி கமிஷனர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். சிதறல்களை தடவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
இது குறித்து மாடசாமியின் மகன் சுந்தர் பாளை அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ஜெயசேகரன், தங்க கிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக மாநகர மாவட்ட முன்னாள் செயலராக இருந்த பாப்புலர் முத்தையாவின் அண்ணன் மாடசாமி என்பது குறிப்பிடத்தக்கது.