4 நாட்கள் தொடர் விடுமுறை: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை: மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வரும் 5ம் தேதி முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. 5ம் தேதி மகாவீர் ஜெயந்தி, 6ம் தேதி புனித வெள்ளி, சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்களுடன் சேர்ந்து வருவதால் 4 நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை வருகிறது.
இதில் 8ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் வருவதால் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு 2 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- நாகர்கோவிலுக்கு ஈரோடு, கரூர் வழியாக 14 ஏ.சி. பெட்டிகளுடன் கரீப் ரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் (06019) நாளை (4ம் தேதி) இரவு 11.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் (06020) 5ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7.40 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (06021) விடப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து 5ம் தேதி மற்றும் 12ம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
எண் (06022) சிறப்பு ரயில் 6ம் தேதி மற்றும் 13ம் தேதி மதியம் 3.10 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்ட்ரலை வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயிலில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள்-3, 2 அடுக்கு ஏ.சி. பெட்டிகள்-3, 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள்-12, 2 பொதுப் பெட்டிகள் இடம் பெறும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.












Click it and Unblock the Notifications