இங்கு விடுதலைப் புலிகள் முகாம்கள் இல்லை: சிங்கள பத்திரிகைக்கு தமிழக அரசு மறுப்பு
சென்னை: தமிழகத்தில் 3 ரகசிய முகாம்களில் 150 விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்று மீண்டும் இலங்கை திரும்பியதாக சிங்கள பத்திரிகை வெளியிட்ட செய்திக்கு தமிழக டிஜிபி ராமானுஜம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையைச் சேர்ந்த நாளேடு ஒன்றில், 150 விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் ஆயுதப் பயிற்சிப் பெற்று, பின்னர் அவர்கள், மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குத் திரும்பி, அந்நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய ஆயுத பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. சில காலத்திற்கு முன்பு இது போன்ற ஒரு தகவல் இலங்கையில் கிளப்பப்பட்டு பின்னர் அது வெளியானதற்கு பழியை இந்திய ஊடகங்களின் மீது தவறாக போட்டு, அச்செய்தி திரும்பப் பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு, மறைமுக அல்லது வெளிப்படையான தீவிரவாதச் செயல்கள் ஏதும் நடைபெறாதபடி கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது தீவிரவாதி எனக் கண்டறியப்பட்டால், அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். எனவே, தமிழ் நாட்டில் ஆயுதப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவது அல்லது அவ்வாறு நடத்தப்பட அனுமதி வழங்கப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகமும் கண்டனம்
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் முகாம் அமைத்து பயிற்சி பெறுவதாக சிங்களப் பத்திரிகை திவயின வெளியிட்டுள்ள செய்தி ஆதாரமற்றது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்களப் பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது. அப்படியான ஒரு விஷயம் நிகழ்ந்திருந்தால் இருநாட்டு உளவுத்துறைக்கும் தகவல் கிடைத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களித்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான அவதூறு செய்திகளை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசும் மறுப்பு
சிங்களப் பத்திரிக்கையின் செய்திக்கு இலங்கை அரசும் கூட மறுப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications