டெல்லி வந்த பிலாவல் பூட்டோ ராகுல் காந்தியுடன் சந்திப்பு- பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது மகன் பிலாவல் பூட்டோ மற்றும் குடும்பத்தினருடன் டெல்லி வந்தார். இன்று பிற்பகல் அவர் ஆஜ்மீர் தர்கா செல்கிறார்.
சர்தாரி பாகிஸ்தான் அதிபர் என்பதால் அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் விருந்தளித்துக் கெளரவித்தார். இதில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது ராகுல் காந்தியும், பிலாவல் பூட்டோவும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது.
பிலாவல் பூட்டோ இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து பிலாவல் பூட்டோ வெளியட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இந்தியாவில் அமைதி நிலவட்டும். இப்போதுதான் நான் டெல்லி வந்து இறங்கியுள்ளேன். எனது முதல் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விருந்து நிகழ்ச்சியின்போது ராகுலும், பிலாவலும் முதல் முறையாக சந்தித்துப் பேசிக் கொண்டனர். 24 வயதாகும் பிலாவல் பூட்டோதான் சர்தாரி-பெனாசிரின் அரசியல் வாரிசு. அவர்தான் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். சர்தாரி தனக்குப் பின்னர் பிலாவலை முழு நேர அரசியலாக்கக் காத்திருக்கிறார்.
அதேபோல இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று காங்கிரஸாரால் வர்ணிக்கப்படுபவர் ராகுல் காந்தி. விரைவில் அவரை பிரதமர் பதவியில் அமர்த்த சோனியா திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்த இரு இளவரசர்களும் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டு மற்றும் குண்டு வீச்சுத் தாக்குதலில் பலியானவர். அதேபோல ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தியும், மனித வெடிகுண்டுக்குப் பலியானவர்.
அதேபோல ராகுல் காந்தியின் பாட்டியான இந்திரா காந்தி துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார். அதேபோல பிலாவல் பூட்டோவின் தாத்தா சுல்பிகர் அலி பூட்டோ தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.
ராகுல் காந்தியும், பிலாவலும் இங்கிலாந்திப் படித்தவர்கள். ராகுல் கேம்பிரிட்ஜில் படித்தார். பிலாவல் ஆக்ஸ்போர்டில் படித்தவர். ராகுலின் தந்தை பிரதமராக இருந்தவர், அதேபோல பிலாவலின் தாயார் பிரதமராக இருந்தவர். ராஜீவ் காந்தியும் சரி, பெனாசிரும் சரி நெருங்கிய நண்பர்களாகவும் விளங்கியவர்கள்.
ராகுலும் சரி, பிலாவலும் சரி ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தீவிரவாதத்தை தோற்கடிக்க சரியான ஆயுதம் ஜனநாயகம்தான் என்று பெனாசிர் பூட்டோ முன்பு சொல்லியிருந்தார். அதையே தனது தாரக மந்திரமாக செயல்படுத்தி வருபவர் பிலாவல்.
ராகுல் காந்தி எம்.பியாக இருக்கிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார். பிலாவல், இன்னும் தேர்தலி்ல போட்டியிட்டதில்லை. அதேசமயம், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். 2013ல் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிலாவல் முக்கியப் பங்கு வகிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல 2014 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தியை முக்கிய தலைவராக களம் இறக்கவுள்ளது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏகப்பட்ட ஒற்றுமைகளுடன் கூடிய இந்த இரு இளம் தலைவர்களும் இன்று சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications