ராமஜெயம் கொலையான தினத்தில் எனது செல்போனில் பேசியது யார்?... சாந்தி விளக்கம்

ராமஜெயம் கொலை வழக்கில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கிடுகிடுவென திடீர் வேகம் பிடித்துள்ள வழக்கில் குற்றவாளிகளின் நிழலை போலீஸார் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கொலை வழக்கில் முக்கியத் திருப்பமாக, கொலை நடந்த திருச்சியில், அன்று, அம்மா மண்டபம் பகுதியிலிருந்து ஒரு பொதுத் தொலைபேசி மையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் ஒரு நபர் ரூ. 20க்கு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் கொலையாளிகளில் ஒருவர் என்று போலீஸார் சந்தேகப்படுகிறார்கள். இந்த நபர் யாருடன் பேசினார் என்பதை போலீஸார் விசாரித்தபோது, அது, தூத்துக்குடி மாநகராட்சி 9வது வார்டு கவுன்சிலர் சாந்தியின் எண் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து தூத்துக்குடி விரைந்த போலீஸார் சாந்தியையும், அவரது கணவர் மணிவண்ணனையும் பிடித்துக் கொண்டு திருச்சி வந்தனர். அங்கு வைத்து இருவரிடமும் விசாரணை நடந்தது. பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் அழைத்தால் விசாரணைக்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விசாரணை குறித்து சாந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வழக்குக்கும், எனக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராமஜெயத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இதை போலீஸாரிடம் தெரிவித்து விட்டேன்.
போலீஸார் கூறிய எண்ணிலிருந்து எனது தோழி ஒருவர்தான் அடிக்கடி என்னிடம் பேசுவார். இதையும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன் என்றார்.
கொலையாளிகள் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications