ராமஜெயம் கொலை செய்யப்பட்டது அதிகாலை 2.50 மணிக்கா?

ராமஜெயம் கொலையைப் போல ஒரு பெரும் குழப்பத்தை தமிழக போலீஸார் சந்தித்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தக் கொலை வழக்கில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தகவல் கிடைத்தபடி இருப்பதால் போலீஸாரே பெரும் குழப்பத்தில் உள்ளனர். கொலையைச் செய்தவர்கள் போலீஸாரைத் திசை திருப்பும் வகையில் படு கில்லாடித்தனமாக பலவற்றை செய்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் பல திசைகளிலும் தங்களது விசாரணைப் பார்வையை போலீஸார் விரட்டி விட்டு வருகின்றனர். முதலில் காலை 5 மணியளவில் வாக்கிங் போனபோது ராமஜெயம் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. சில நாட்கள் கழித்து அவர் இரவிலேயே ஒரு வீட்டில் வைத்து சிலரால் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் ராமஜெயம் காலை 5 மணிக்கு மேல் வாக்கிங் போனார் என்றும் அதன் பிறகுதான் அவரைக் காணவில்லை என்றும் அவரது மனைவி போலீஸில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது போலீஸாருக்குக் கிடைத்துள்ள புதுத் தகவல் அவர்களை குழப்பமடையச் செய்வதாக உள்ளது. அதாவது ராமஜெயம் கட்டியிருந்த கைக்கடிகாரம் 2.50 மணியோடு நின்றுள்ளது. அதற்குப் பிறகு அது ஓடவில்லை. அவரை தாக்கி அடித்தபோது அதிர்ச்சியில் கடிகாரம் நின்று விட்டது.
எனவே அந்த 2.50 மணியளவில்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே இந்த ஓடாத கைக்கடிகாரம் தற்போது ஒரு முக்கிய சாட்சியாக மாறியுள்ளது.
அதிகாலையில் ராமஜெயம் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அதிகாலை 2.50 மணிக்கு யாரும் வாக்கிங் போக வாய்ப்பில்லை என்பதால் அந்தநேரத்தில் ராமஜெயம் எங்கிருந்தார், அவர் சென்ற இடம் எது, ஏன் அங்கு போனார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications