ஜனவரி மாதம் ராணுவ நகர்த்தப்பட்டது என்பது வழக்கமான ஒன்றுதான்: பாதுகாப்புத்துறை செயலர் விளக்கம்
டெல்லி: டெல்லியை நோக்கி ஜனவரி மாதம் ராணுவம் நகர்த்தப்பட்டது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சசிகாந்த் சர்மா ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஜனவரி மாதத்தில் ராணுவம் மேற்கொண்டது வழக்கமான நடவடிக்கையே என்றும் அவர் விவரித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் டெல்லியை நோக்கி ராணுவத்தை நகர்த்த தலைமை தளபதி வி.கே.சிங் உத்தரவிட்டிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தலைமை தளபதி ஆகியோர் மறுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவாகரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழுவானது பாதுகாப்பு செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து நிலைக்குழு முன்பு ஆஜரான பாதுகாப்பு செயலர் சசிகாந்த், ராணுவம் மேற்கொண்டது வழக்கமான நடவடிக்கை என்றும் இது தொடர்பாக அரசிடம் எதுவித அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும் விவரித்துள்ளார். இநத நடவடிக்கையில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை என்பது சசிகாந்த்தின் கருத்து.
இதேபோல் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும் நிலைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன?
தமது பிறந்த தேதி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தலைநகர் டெல்லியை நோக்கி 2 தரைப்படை நகர்த்த உத்தரவிட்டிருந்தார் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் செய்தி வெளியாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து தமக்கு எதிராக தீர்ப்பு வரும்நிலையில் மத்திய அரசை மிரட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கையை வி.கே.சிங் மேற்கொண்டிருந்தாரா என்றும் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.
ஆனால் அரசுக்கு எதிராக எந்த ஒரு ராணுவப் புரட்சிக்கும் திட்டமிடவில்லை என்று வி.கே.சிங் மறுத்திருந்தார். எந்த விவகாரத்திலுமே எதுவுமே பேசாமல் இருந்து வரும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இத்தகவலை உடனே மறுத்துவிட்டார். மேலும் "நமது ராணுவம் இத்தகைய ஒரு நடவடிக்கையில் இறங்காது" என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications