நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவில் மீண்டும் முரளி மனோகர் ஜோஷி-திமுக சார்பில் இளங்கோவன்
டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) புதிய உறுப்பினராக, அந்தக் குழுவின் இப்போதைய தலைவரான பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுகணக்குக் குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 10 பேரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதிதாக லோக்சபா எம்.பிக்கள் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வரும் மே மாதம் முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தக் குழு செயல்படும்.
இப்போது உறுப்பினர்களாக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான ஜெகதாம்பாள், கே.சுதாகரன், கே. சாம்பசிவ ராவ் மற்றும் ரேவதி ரமண் சிங் (சமாஜ்வாடி கட்சி), ஆதிசங்கர் (திமுக) ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இவர்களுக்குப் பதிலாக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், அசோக் தன்வார், சர்வே சத்யநாராயணன், தர்மேந்திர யாதவ் (சமாஜ்வாடி கட்சி), டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் தரூர் மற்றும் இளங்கோவன் ஆகியோர் புதுமுகங்கள் ஆவர். இதேபோல், பொதுக்கணக்குக் குழுவுக்கு ராஜ்யசபாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 7 உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இந்தக் குழு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications