ஆயுதள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் மருத்துவருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
டெல்லி: அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதியான 80 வயது பாகிஸ்தான் நாட்டு மருத்துவர் கலீல் ஜிஸ்திக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த கலீல் ஜிஸ்தி 1992-ம் ஆண்டு தமது உறவினரைப் பார்க்க ராஜஸ்தானின் அஜ்மீருக்கு வருகை தந்தார். அப்போது சொத்துத் தகராறு ஒன்றில் நடந்த கொலை வழக்கில் கலீல் ஜிஸ்தியும் சிக்கினார்.
19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கலீல் ஜிஸ்திக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 80 வயது முதியவரான கலீல் ஜிஸ்திக்கு கருணைகாட்ட வேண்டும் என்று அம்மாநில மக்கள் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்) குரல் கொடுத்தது.
தொடர்ந்தும் கலீல் ஜிஸ்தியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த அமைப்பு மேற்கொண்டது.
சர்தாரி வருகை
இந்நிலையில் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ஜிஸ்தி விவாகரத்தில் கருணை காட்டுமாறு வலியுறுத்தினார். இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜிஸ்தி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என்றார்.
இந்நிலையில் ஜிஸ்தியின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜிஸ்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் கராச்சிக்கு திரும்பிச் செல்லுவதற்கான அனுமதி கோரும் மனுவை தனியே தாக்கல் செய்யுமாறும் அதுவரை அஜ்மீரிலேயே இருக்குமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications