நாட்டின் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்க முப்படைத் தளபதிகளுக்கு பார்லி. நிலைக்குழு உத்தரவு
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பது குறித்து வரும் 20-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முப்படைத் தளபதிகளுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு உத்தரவிட்டுள்ளது.
முப்படைத் தளபதிகளை நேரில் ஆஜராகக் கோரும் இந்த நடவடிக்கை மிகவும் அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் தளவாடப் பற்றாக்குறையும் குறைபாடுகளும் இருப்பதாக ராணுவத் தளபதி வி.கே.சிங் கூறியதாகச் செய்திகள் வெளியாகின. மேலும் மத்திய அரசிடம் அனுமதி பெறாமலேயே ராணுவத்தை டெல்லி நோக்கி நகர்த்த வி.கே.சிங் உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சர்ச்சைகள் தொடர்பாக பாதுகாப்புத் துறை செயலாளர் சசிகாந்த் ஷர்மா, வி.கே.சிங் ஆகியோரிடம் இந்த விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு 2 முறை விளக்கம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ராணுவம், கடற்படை, விமானப்படைத் தளபதிகள் வரும் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முடிவு செய்திருக்கிறது.
எனினும், தேவைப்பட்டால் குழு முன் ஆஜராக வேண்டிய தேதி, முப்படைத் தளபதிகளுக்கும் வசதியாக இருக்கும்படி மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு திங்கள்கிழமை கூடியபோது இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. ராணுவப் படைப் பிரிவுகளின் நடமாட்டம் குறித்து அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற கருத்து சரிதான் என்று பாதுகாப்புத் துறைச் செயலர் சசி காந்த் சர்மா இந்தக் கூட்டத்தில் உறுதி செய்தார். ராணுவம் எந்த வழக்கமான நடைமுறைகளையும் மீறிவிடவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.












Click it and Unblock the Notifications